Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தமிழ் வானம்
உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
இடுகாட்டிலிருந்து காற்றில் மிதந்து வருகிறது எனக்கான அழைப்பு. இவ்வுலகை விட்டுப்பிரிதலை சாத்தியப்படுத்துகின்றன துரோகத்தால் எரிகின்ற ஆழ்மனது. இப்பிரபஞ்சத்தில் ஒரு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் கனவுகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன மரம் உதிர்க்கும் இலையென. தனிமையின் கோரப்பற்களில் சிக்கியிருக்கிறது என் இரவு. பிரக்ஞையின்றி தடுமாறுகின்றன என் கால்கள் பாதைகளை தொலைத்துவிட்டு. தோல்வியின் ஏளனச்சிரிப்பில் சிதைகிறது என் உயிர். கூகையொன்றின் கடும்குரல் தூரத்தில் எங்கோ கேட்கிறது. பறவைகள் இனம்கண்டுவிட்டன மரணத்தின் விளிம்புக்கு நான் செல்லவிருப்பதை.
விண்ணை பொத்துக்கொண்டு வீழ்கிறது மழை. நிசப்தம் நிலவிய இருளுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு நடக்கிறேன். நெருஞ்சிகள் நிறைந்த பாதையின் ஓரங்களில் பூத்திருக்கிறது வாடாமல்லி. உயிரற்றவன் நடப்பது போலிருக்கிறது என் நடை. இதயத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது இருவார்த்தைகள். பிணமொன்றின் நாற்றம் உங்கள் நாசிக்கு எட்டும் நாளுக்காய் காத்திருங்களென்று பாதையோர பூக்களிடம் சொல்கிறதென் மனது.
அவமானங்களும்,அவஸ்தைகளும்,நிறமற்ற வாழ்கையை நிறைத்திருந்த பொழுதின் முடிவில் தோன்றிற்று ஒரு பெண்ணின் மீதான ஆர்வம். தோழமைக்கும் அப்பால் நின்றிருந்த அவளை நெருங்கியபோது அவளே உலகமென்ற நிச்சயமற்ற முடிவொன்று உருப்பெற்றது. உறைந்த பனிக்கட்டியை ஒத்திருந்தது அவள் மீதான உருக்கமான நேசம் மிகத்தூய்மையாய். காலச்சுழற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்த அவள் அபலை அல்லள். உக்கிரதாண்டவம் ஆடுகின்றன அவளது கடுஞ்சொற்கள். அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது.
இதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும். நண்பனென்று வெகுஇயல்பாய் உரைத்து, இதயத்தை கொன்றவளுக்கு பாடித்திரியும் இந்நேசங்களை கொல்லத்தெரியவில்லை பாவம். உடலெங்கும் பரவுகின்ற வெம்மை நடுநிசியின் குளிருக்கு ஏதுவாகத்தானிருக்கிறது.இன்னும் சற்றுதூரத்தில் எனக்கான இடம் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குள் சென்று மறைவதே மனதுக்குள் மலர்கின்ற நேசத்தின் முடிவுகளா? இந்நேரம் அவளென்ன செய்துகொண்டிருப்பாள்? மகளாய்,தோழியாய்,சகோதரியாய் பல்வேறு வேஷங்களில் அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் இல்லையேல் நாளைய திருமணத்திற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.
என் பிணத்தை நானே சுமந்து நடப்பது கடினமென்று உணர்ந்து மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தேன் கல்லறை நோக்கி.பழகிய நாட்களின் நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்துவிட்டு மறைந்துகொண்டிருந்தன. முதல் முறை பார்த்தபோது கருமைநிற சேலையொன்றில் மிளிர்ந்தாள். அது என்னை மூடப்போகும் சவத்துணி என்று அன்றே உணர்ந்திருக்கவேண்டும். பின்னொரு நாளில் என்னை பார்க்கத்தோன்றவில்லை என்றாள் வெகு நிதானத்துடன் தீர்க்கமான குரலில். பாதி இறந்த இதயம் முழுவதுமாய் மரித்தது அன்றுதான். எல்லாவற்றிக்கும் முடிவுண்டு என்பதை சற்றே தாமதமாய் உணர்ந்திருக்கிறது மனது.
இடுகாட்டுக்குள் நடுச்சாமத்தில் நுழைவது சற்று வருத்தமாய் இருக்கிறது. ஊரறிய மரித்திருந்தால் பாடைகட்டி ஊர்வலமாய் அந்தியில் நுழைந்திருக்கும் என் உடல். உயிருக்கு சொந்தமானவளே இல்லை என்றானபின் ஊரைப்பற்றி என்ன கவலை? இடுகாட்டின் நடுவில் சென்று சம்மணமிட்டு அமர்கிறேன். ஓவென்று ஒப்பாரி வைக்க யாருமில்லை. அடிவயிற்றிலிருந்து மேலெழும்புகிறது பெரும் ஓலம். நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறேன். என் ஓலம் கேட்டு உறக்கம் தொலைத்த நாய் ஓடிவந்து எதிரே நிற்கிறது. கைகளால் முடிந்தவரை ஆழமான குழியொன்றை தோண்டுகிறேன். நகம் கிழிந்து ரத்தம் சொட்டுகிறது. இரக்கமற்ற இப்பூமியில் பிறந்துவிட்டதை எண்ணி ஓங்கி ஓங்கி மண்மீது அறைகிறேன். விழுகிறேன். புரள்கிறேன். கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது இருண்ட வானம். கனத்த இருளின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது என் உருவம்.